இனக் கலவரம் ஏற்படுத்தவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்! – எண்ணெய் ஊற்றுகின்றது மஹிந்த அணி
“மண்டைகளைப் பிளந்து, கை – கால்களை வெட்டி, வயிறுகளைக் கிழித்து, அந்தரங்க உறுப்புகளை அறுத்து சிங்கள – தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும் இனக் கலவரத்தை ஏற்படுத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம் வகுத்துள்ளனர். அதற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட வாள்களும், கத்திகளுமே தற்போது பள்ளிவாசல்களில் இருந்தும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் இருந்தும் பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்படுகின்றன.”
– இவ்வாறு தெரிவித்துள்ளது மஹிந்த அணி.
இது தொடர்பாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தமிழ் ஊடகம் ஒன்றிடம் மேலும் கூறியுள்ளதாவது:-
“இலங்கையை இஸ்லாமிய நாடாக்குவதே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கின்றது. கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமன்றி பௌத்த விகாரைகள், இந்துக் கோயில்கள் ஆகியவற்றிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி மதக் கலவரத்தை அரங்கேற்றி ஒரு பகுதியினரைக் கொலைசெய்வது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதலாவது திட்டம். அதன் பின்னர், சிங்கள – தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தி எஞ்சியோரைக் கொலைசெய்வது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் இரண்டாவது திட்டம்.
இதற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட வாள்களும், கத்திகளுமே தற்போது பள்ளிவாசல்களில் இருந்தும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் வீடுகளில் இருந்தும் பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்படுகின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் அரச தரப்பினரும் கைகட்டி வேடிக்கை பார்க்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளையும், அவர்களின் உறவினர்களையும் இந்நாட்டிலிருந்து இல்லாதொழிக்க வேண்டும்.
இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கி அதில் முஸ்லிம் மக்களை மட்டும் வாழ விடும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வகுத்த திட்டத்துக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயுள்ளார்கள். அவர்கள் யார் என்று நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர்கள் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்றார்கள். அவர்களையும் அரசு உடன் கைதுசெய்ய வேண்டும். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.