கொழும்பில் அதிரடி வேட்டை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளம் சிக்கியது!!

கொழும்பில் தேடுதல் வேட்டையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளமாகச் செயற்பட்ட வீடொன்றைப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடிப் குடியிருப்பு பகுதியிலுள்ள வீடு கண்டுபிடிக்கப்பட்டு அங்கு பொலிஸாரினாலும் விசேட அதிரடிப் படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாக மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த, மெசஞ்ஜர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் இருந்தே குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசீமினால் பதிவு செய்யப்பட்டது எனக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் மற்றும் தெளஹீத் ஜமா அத் அமைப்பினரின் தகவல்கள் அடங்கிய டெப் கணினி ஒன்று, 12 கையடக்கத் தொலைபேசிகள், 5 கடவுச்சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாட்டுக்கு வீட்டை வழங்கிய உரிமையாளரைக் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கியிருந்த இடமொன்று உள்ளது எனக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *