அரசு மீது பேராயர் அதிருப்தி!
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதல்களுடன் அமைச்சர்கள், எம்.பிக்கள்
தொடர்புபட்டிருந்தால் உரிய தண்டனை வேண்டும் எனவும் வலியுறுத்து
“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் அரசு செயற்பட்ட விதம் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது. இந்தத் தாக்குதல்களுடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தினார் கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தத் தாக்குதல்களைச் செய்தவர்களை மனிதர்கள் என்று எவரும் சொல்லிவிட வேண்டாம். அவர்கள் படுகேவலமான பிறவிகள்.
கடவுளின் பெயரால் ஓர் இனத்தை – மதத்தை அழிக்க முடியாது. இந்தக் கொலைவெறியை எந்த மதமும் ஏற்றுக்கொள்ளாது.
இந்தத் தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குத் தேவையான வெடிபொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் அந்த வெடிபொருட்களைக் கொண்டு வருவதற்காக அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றிருக்குமாயின் அவர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.