ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெரும் கோட்டையாக கிழக்கு!! – அனைவரையும் கூண்டோடு அழித்தொழிப்போம் என ரணில் சபதம்

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெரும் கோட்டையாக கிழக்கு மாகாணம் செயற்படுகின்றமை தற்போது உறுதியாகியுள்ளது. எனவே, அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைக் கூண்டோடு அழித்தொழிப்போம். அதேவேளை, நாட்டின் ஏனைய இடங்களிலும் மறைந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளையும் இல்லாதொழிப்போம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளில் பலர் கிழக்கிலும், ஏனையோர் தெற்கிலும் ஏனைய இடங்களிலும் மறைந்திருக்கின்றார்கள்.

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அவர்களுடன் தொடர்புபட்ட பலர் தினந்தோறும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் அடங்குகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் வழங்கும் தகவல்களின் பிரகாரம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் வெடிகுண்டுகளையும், வெடிபொருட்களையும், தற்கொலை அங்கிகளையும் கிழக்கிலும் தெற்கிலும் ஏனைய இடங்களிலும் மீட்டு வருகின்றோம்.

சில சர்வதேச நாடுகளின் பிண்ணனியில்தான் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாகியுள்ளார்கள். எனவேதான் அவர்களை இல்லாதொழிக்க சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளின் உதவியையும் நாம் நாடினோம்.

அதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை இல்லாதொழிப்பதற்காக எமது முப்படையினரும் பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் இரவு பகலாகக் கடமையாற்றி வருகின்றார்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *