‘பொனி’ சூறாவளி மேலும் வலுவடைகிறது!

இலங்கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள ‘பொனி’ சூறாவளி எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

‘பொனி’ சூறாவளியானது, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கிழக்கு கரையோர கடற்பிராந்தியத்தில் வட மேல் பகுதியூடாக பயணிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை வளிமணடலவியல் திணைக்ளம் தெரிவித்துள்ளதாவது:

” தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “FANI”  2019 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் அருகில் பொத்துவிலுக்குக் கிழக்காக ஏறத்தாழ 670 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பலத்த ஓரு சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதி ஏப்ரல் 30ஆம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாகத் திரும்பி வடகிழக்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. தென் கடற்பரப்புகளில் பல இடங்களில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

(தொகுதி பலமான சூறாவளியாக விருத்தியடைந்த பின்னர் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும்).

இலங்கைக்கு கிழக்காகவும் தென்கிழக்காகவும் உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும்உயர் அலைகளுடனும்காணப்படும்.

(தொகுதியின் மையப் பகுதியிலிருந்து 200-300 கிலோ மீற்றர் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும்).

இலங்கைக்கு கிழக்காகவும் தென்கிழக்காகவும் உள்ள ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *