மே 6 வரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடல்! – தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தீர்மானம்
தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது.
இதன்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் மீண்டும் நிறுவனமயப்படுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது இந்தத் தீவிரவாத இயக்கத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டும் ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடர்ச்சியாகவும் பலமாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்படுவது மே மாதம் 06 திகதி வரை பிற்போடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
பரீட்சைகள் நடைபெறும் இடங்களுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய நிலைமையில் மே தின ஊர்வலங்களை நடத்த வேண்டாம் என்றும் இதன்போது தேசிய பாதுகாப்பு சபை அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டது.
அரச நிறுவனங்களுக்கும் முன்னணி சுற்றுலாத்துறை ஹோட்டல்களுக்கும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களுக்கும் விரிவான பாதுகாப்பை வழங்குவதற்கு புதிய பாதுகாப்புத் திட்டமொன்றுக்கு தேசிய பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.