சஹ்ரானுடனான படத்தை வைத்து தனது நற்பெயருக்குக் களங்கமாம்! – ஹிஸ்புல்லா கவலை

 

தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் என்பவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றது எனக் கவலை வெளியிட்டுள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் சஹ்ரான் ஹாசீம் என்பவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரசுரித்து என் மீது மிக மோசமாக – அபாண்டமாக பழிசுமத்தி என்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்தேன் .

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது சகல வேட்பாளர்களையும் அழைத்துக் கலந்துரையாடினார். அந்தச் சந்தர்பத்தில் ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் நானும் கலந்துகொண்டேன். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சகல முஸ்லிம் வேட்பாளர்களும் அங்கு கலந்துகொண்டு அவரோடு கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே இன்று என் மீது பழிசுமத்துவதற்காக ஊடகங்கள் பிரசுரித்து எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முனைகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு எந்தச் சந்தர்பத்திலும் அவரை நான் சந்திக்கவும் இல்லை, அவரின் இயக்கத்துக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும், குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *