புலனாய்வுப் பிரிவை வழிநடத்துவது யார்?
பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அது தொடர்பில் புலனாய்வுப்பிரிவு தலைவர், ஜனாதிபதி, பிரதமர், முப்படைத்தளபதிகளுக்கு தெரியப்படுத்தாதது ஏன் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல இன்று கேள்வி எழுப்பினார்.
புலனாய்வுப் பிரிவு தலைவரை வழிநடத்துவது யார்? எனவே, மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், புலனாய்வுப்பிரிவு தலைமை அதிகாரி, அது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அது கடிதம் எழுதி தெரியப்படுத்தும் காரணமா? வேகமாக செயற்பட்டிருக்க வேண்டும்.
இவர்களை வழிநடத்துவது யார்? பிரதமரால் அழைப்பு விடுக்கப்பட்டும் பாதுகாப்பு பேரவைக் கூடடத்துக்கு எவரும் வரவில்லை. இது ஏன்? இதன் பின்னணி என்ன? எமக்கு பலத்த சந்தேகம் இருக்கின்றது. இந்திய தரப்பிலிருந்து ஏப்ரல் 4 ஆம் திகதியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ” என்றார்.