கொழும்பு வெடிகுண்டுத் தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரனும் பலி!

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவரும் பலியாகியுள்ளார்.

பங்களாதேஷின் பிரதமரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சௌத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சௌத்ரி (வயது 8), ஜோகன் சௌத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

​இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் ஷேக் சோனியா குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலிலும் குண்டு வெடித்தது.

அப்போது ஹோட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மஷியுல் ஹக்யு சௌத்ரி மற்றும் ஜயான் சௌத்ரி (வயது 8) குண்டுவெடிப்பில் சிக்கினர். இதில், மஷியுல் ஹக்யு சௌத்ரி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜயான் சவுத்ரி மாயமானார் எனக் கூறப்பட்டது.

இந்தநிலையில், ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் ஜயான் சௌத்ரி உயிரிழந்து விட்டமை தற்போது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும், ஜயான் சௌத்ரியின் உடல் நேற்று பங்களாதேஷ் கொண்டு செல்லப்பட்டது என இலங்கையிலுள்ள பங்களாதேஷ் தூதரகத் தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *