நீர்கொழும்பில் மைத்திரி! தேவாலயத்தைப் புனரமைக்குமாறு இராணுவத்துக்குப் பணிப்பு!!
குண்டுத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவபிட்டி சென் செபஸ்டியன் தேவாலயத்தின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் தேவாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
அருட்தந்தை ஸ்ரீலால் பொன்சேகாவைச் சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்காகவும் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.
அதேபோன்று தேவாலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பற்றிக் கேட்டறிந்த ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளை மிக விரைவில் மேற்கொள்வதற்கு இராணுவத்துக்குத் தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இவ்வாறான கொடூர செயற்பாடுகள் மீண்டும் நாட்டினுள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும், அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அருட் ந்தை ரவீன் சந்தசிறி பெரேரா உள்ளிட்ட அருட்தந்தையர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதையையும் செலுத்தினார்.
பிரதேசத்தில் உள்ள சில வீடுகளுக்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், அக்குடும்ப உறவினர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.