காதலியை வன்புணர்ந்து படுகொலைசெய்து எரித்து மரத்தில் தொங்கவிட்ட காதலன் கைது!
கல்லூரி மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்து எரித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. இதையடுத்து அவரின் காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 16ஆம் திகதி மரத்தில் தொங்கிய ஒரு பெண்ணின் உடல் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அது கடந்த 14ஆம் திகதி மாயமான நவோதயா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது என்ற மாணவியின் உடல் என்று தெரியவந்தது.
மாணவியின் உடல் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து தான், தேர்வில் தேர்ச்சி பெறாததால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கடிதம் ஒன்று சிக்கியது. ஆனால், தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர் எப்படி தூக்கிட்டுப் பின் எரிந்த நிலையில் இருப்பார் என்ற சந்தேகம் எழுந்தது.
உண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பதைப் பொலிஸார் தற்கொலை எனக் கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் என்று மனித உ ரிமை அமைப்பினர் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், இது குறித்து மாநில அரசு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக் கூறி வந்தனர்.
இதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
இது மட்டுமல்லாமல் 50 ஆயிரம் பேர் மதுவுக்கு நீதிகேட்டு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கினர்..
திடீர் திருப்பம்;
இளைஞர் கைது!
இந்தநிலையில், குறித்த மாணவி படுகொலை தொடர்பாக சுதர்ஷன் யாதவ் (வயது – 27) என்ற இளைஞரை நேதாஜிநகர் பொலிஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின்போது மாணவி மது தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் குறித்த இளைஞரைக் காதலித்தார் எனவும், அவர்தான் மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்துவிட்டு சடலத்தை அரைகுறையுடன் எரித்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.