பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை நழுவ முடியாது! – ஐ.நா. செயலர் உடும்புப்பிடி
“பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து இலங்கை ஒருபோதும் நழுவிச் செல்ல முடியாது. சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் உரிய வகையில் நிறைவேற்றப்பட வேண்டும்.”
– இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நாவின் சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்கச் சென்றுள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், ஐ.நா. செயலருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் ஐ.நா. செயலர்.
அத்துடன், இலங்கை மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா. அர்ப்பணிப்புடன் இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முறையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் ஐ.நா. பொதுச் செயலர் திருப்தி வெளியிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.