இந்த ஆண்டில் இனி அதிரடி காட்டுவேன்! – சங்கா முன்னிலையில் சஜித் அறிவிப்பு

“இந்த ஆண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயரில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் குமார் சங்கக்காரவும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித், அரசியலையும், கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு உரையாற்றினார்.

“கிரிக்கெட்டில் சங்கக்கார கையாளும் யுக்தியை, நுட்பத்தை அரசியலில் களத்தில் நான் கையாண்டு வருகின்றேன்.

ஒரு கட்டத்தில் நிதானமாக ஆடுதல், மற்றுமொரு கட்டத்தில் அதிரடியாக ஆடுதல் என சூழ்நிலைக்கேற்ப வேகத்தை மாற்றிவருகின்றேன்.

எனினும், இந்த ஆண்டில் சிக்ஸர் மழை பொழிய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது” – என்றார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறங்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்தச் செய்திகளை குமார் சங்கக்கார அப்போது மறுத்திருந்தார். இந்தநிலையில், அவர் முன்னிலையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *