முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பிரிவினையின்றி அனுஷ்டிப்போம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எந்தவித பிரிவினைகளும் இன்றி அனுஷ்டிக்கக் கரைதுறைப்பற்று பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இதற்காக உருவாக்கப்பட்டுள்ள நினைவேந்தல் குழுவுடன் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபைக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை அனைத்துக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இதன்போது போரில் உயிர்நீத்த அனைத்து மக்களுக்குமான முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை எந்தவித பாகுபாடும் பிரிவினைகளும் இன்றி அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதி என்பதால் நிகழ்வுக்கு முழு ஆதரவையும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக இடம்பெற வேண்டிய விடயம் என்று கரைதுரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.தவராசா இதன்போது சுட்டிக்காட்டினார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.