கண்ணீர்க் கதறலுக்கு மத்தியில் உறவுகள் 10 பேரும் நல்லடக்கம்!

 

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இரட்டைப் பெண் குழந்தைகள் உட்பட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன.

விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்களும் இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கம், டச்பார், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

சடலங்கள் மாலை மட்டக்களப்பு புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு உயிரிழந்தவர்களுக்குக் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வழிபாடுகளைத் தொடர்ந்து 6 பேரின் சடலங்கள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

டச்பார் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலங்கள் தன்னாமுனை பொது மயானத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *