‘தேசிய அரசு’ என்ற பேச்சுக்கு இனிமேல் இடமே இல்லையாம்!
தேசிய அரசு அமைப்பதற்குரிய இனி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது
கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இருந்து வெளியேறியது. அதன்பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. எனினும், மீண்டும் தேசிய அரசு அமைக்கும் முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரியிருந்தார். எனினும், ஜனாதிபதி பக்கம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த ஜனாதிபதி தரப்பில் இருந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சந்தேகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இனிமேல் தேசிய அரசை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என்று தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குச் சிறிது காலமே உள்ளதால் அதுவரை பொறுமை காப்பது என்றும் அவர் தீர்மானித்துள்ளார்.
தேசிய அரசு அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்தால் மட்டுமே இனி அதைப் பற்றிப் பரிசீலிப்பது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
தனது இந்த முடிவைக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கும் தயராகுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.