யாழ். பல்கலை புகுமுக மாணவிகளுக்கு சிரேஷ்ட மாணவர் பாலியல் தொந்தரவு! – துணைவேந்தரிடம் உடனடியாக முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவிகளுக்கு, சிரேஷ்ட மாணவர்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புகுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்றது.

அங்கு வருகை தந்த சிரேஷ்ட மாணவர்கள் புகுமுக மாணவர்கள் சிலரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

அத்துடன், சில சிரேஷ்ட மாணவர்கள் புகுமுக மாணவிகள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர் எனவும் கூறப்படுகின்றது. இதனை மாணவி ஒருவர் காணொளி எடுக்க முற்பட்டபோது அந்த மாணவியை சிரேஷ்ட மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான மாணவி உடனடியாகவே பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இது குறித்து முறைப்பாடு செய்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்த துணைவேந்தர் குறித்த வரவேற்பு நிகழ்வை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாக பகிடிவதை என்ற போர்வையில் பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளன எனப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *