“இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?” – வட்டுவாகலைக் கண்ணீரால் நனைத்தனர் சொந்தங்கள்

இறுதிப் போரின்போது இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனக் கோரி முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் திரண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அங்கிருந்து பேரணியாக வட்டுவாகல் பாலத்தை நோக்கிச் சென்றனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள், “வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே? சர்வதேசமே பதில் கூறு!”, “உண்மையைக் கண்டறிய சர்வதேச விசாரணையே வேண்டும்!”, “சர்வதேசமே போர்க்குற்றங்கள் இழைத்த படையினருக்கு உரிய தண்டனை வழங்கு!”, “நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை நாம் ஓயாது போராடுவோம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

வட்டுவாகல் பாலம் வரை பேரணியாக வந்த உறவினர்கள், அங்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது சொந்தங்களைக் கையளித்த இடத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீரால் நனைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *