டுபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படுகின்றார் ‘மதுஷ்!’

டுபாயில் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது 20 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

டுபாயில் தொடர்ந்து தங்கியிருக்க அவர் அனுமதி கோரித் தாக்கல் செய்த மேன்முறையீடு 18 ஆம் திகதி அங்குள்ள நீதிமன்றத்தில் ஆராயப்படவுள்ளது.

அவருக்கு டுபாயில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படமாட்டாதென அங்கு சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு நாடு கடத்தப்படும்போது மதுஷை டுபாயில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று இலங்கைக்குக் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

டுபாயில் விடுவிக்கப்பட்ட மதுஷின் சகாக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டமை போலன்றி மதுஷைத் தனிப்பட்ட முறையில் தங்களிடம் கையளிக்க வேண்டும் என்ற இலங்கை அரசின் கோரிக்கையை டுபாய் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *