‘பட்ஜட்’டை தோற்கடித்தால் சிக்கல் என்பதாலே பதுங்கினார் மைத்திரி! – மஹிந்த விளக்கம்

“நாட்டின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவி வகிப்பதால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அவரே பொறுப்புக் கூற வேண்டும். அதனால்தான் அவர் தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்றும் எமது நடவடிக்கை ஓயாது.”

– இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்றுமுன்தினம் 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக மஹிந்த அணியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் (ஜே.வி.பி.) வாக்களித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இறுதி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது சபையில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ் ஊடகம் ஒன்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமக்கும் (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுத் தொடரும். வரவு – செலவுத் திட்டத்தை அவர்கள் எதிர்க்கவில்லை என்பதற்காக அவர்களை நாம் பகைத்துக் கொள்ள மாட்டோம். நாம் அனைவரும் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.

ரணில் அணிக்குச் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் முண்டுகொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.

இந்த வரவு – செலவுத் திட்டம் மூவின மக்களையும் ஏமாற்றும்வகையில் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், மூவின மக்களையும் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பது எதிர்வரும் தேர்தல்களில் வெளிப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *