வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இரு ஊழியர்கள் விபத்தில் மரணம்!!
அநுராதபுரம் புத்தளம் பிரதான வீதியின் 38 ஆம் கட்டைக்கு அருகில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்தில் இருந்து நொச்சியாகம பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த இரு ஊழியர்கள் மீது மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த இரு ஊழியர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் அவ்விருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.