மட்டக்களப்பில் முதலை கடித்து குடும்பப்பெண் பரிதாப மரணம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டுகுளத்தில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை கடித்துப் பலியான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கடுக்காமுனைக் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என இனங்காணப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குளத்தை அருள்நேசபுரம், சோதன்கட்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாகப் பாவித்து வருகின்றனர் எனவும், ஆனால் முதல் தடவையாகப் பெண்ணொருவரை முதலை கடித்துள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.