பொறுப்புக்கூறல் இல்லாமல் நிலையான அமைதி கிட்டாது! – இலங்கையிடம் பிரிட்டன் இடித்துரைப்பு
நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கரேத் தோமஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், “பெரும் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தத் தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட்,
“ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், இலங்கை அரசுடன் தனது தொடர்புகளின் ஊடாக ஒரு மகத்தான வேலைகளைச் செய்துள்ளார். இந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது.
குறைந்த பட்சம், இதுபற்றி இந்த நாட்டில் வாழும் இலங்கைச் சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது நல்ல நிலைமை காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது” என்று தெரிவித்தார்.