பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த மன்மதன் சிக்கினார்!
யாழ்ப்பாணத்தில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய், மருதடிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பத்திரிகை மூலம் மணமகள் தேவை என விண்ணப்பம் செய்தே இந்தச் சந்தேகநபர் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டுள்ளமையோடு, அவர்களின் நகைகளையும், சொத்துகளையும் பெற்றுகொண்டு தலைமறைவாகி விடுகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதோடு அவரின் மனைவி, குழந்தைகள் கிழக்கு மாகாணத்தில் வசித்து வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட இளவாலைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவில் அண்மையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மூலம் இளைஞர் சிக்க வைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.