சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு: 2 கோடி ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபட்டது தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு 20 மில்லியன் (2 கோடி) ரூபா இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், அந்தப் பிரதேசவாசிகள் 500 பேருக்கு இழப்பீடாக இந்தப் பணத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நீடித்த இந்த வழக்குக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் சார்பில் பேராசிரியர் ரவீந்திர காரியவசத்தால் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டால், வலிகாமம் பகுதி கிணறுகளில் ​எண்ணெய் மற்றும் கிரீஸ் கலப்பதால், குடிதண்ணீர் மாசடைவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், நொதேர்ன் பவர் நிறுவன மின் உற்பத்திக்கு தடைவிதித்ததுடன், வழக்கைத் தொடர்ந்து நடத்தி வந்தது. இந்தநிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்த பிரதேசவாசிகள் 500 பேருக்கு 20 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *