‘பட்ஜட்’மீது 5 இல் இறுதி வாக்கெடுப்பு – மஹிந்த வீட்டில் கூட்டு எதிரணி முகாம்!
ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்மீது எதிர்வரும் (05) மாலை இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ‘பட்ஜட்’டை நிறைவேற்றுவதற்கான சாதாரணப் பெரும்பான்மை அரசு வசமுள்ளதால் இம்முறை நெருக்கடி ஏற்படாது என ஆளுங்கட்சி பிரதம கொறடா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டுஎதிரணி எம்.பிக்களும், ஜே.வி.பியினரும் ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று )02) நடைபெறவுள்ள சந்திப்பின் பின்னரே தமது நிலைப்பாட்டை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவிக்கவுள்ளது. இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது சு.க. கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, 05 ஆம் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின்போது, எதிர்த்து வாக்களித்தால் மட்டுமே கூட்டணி குறித்த பேச்சு சாத்தியமாகும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் நாளை முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் கூட்டுஎதிரணி எம்.பிக்களும் பங்கேற்கவுள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத் திட்டம் மார்ச் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மார்ச் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் (Second Reading Debate) நடைபெற்று அன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு (Committee Stage Debate ) 19 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதன்படி 13 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று, மாலை பட்ஜட்மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.