நேபாளத்தில் கடுமையான புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலி!
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 400இற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதையடுத்து இராணுவத்தினர், போலிசார் மற்றும் மீட்புப்பணியினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட புயல் மற்றும் கன மழையில் சிக்கி 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது குறித்து இராணுவ செய்தி தொடர்பாளர் யம் பிரசாத் தாகல் கூறுகையில், ‘ 2 எம் ஐ ரக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் சிமரா பகுதியில் மிகப்பெரிய விமானம், மக்களை மீட்க தயார் நிலையில் உள்ளது.
100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் புயல்மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என கூறினார்.