மட்டக்களப்பில் கோர விபத்து! தீப்பற்றின மோ.சைக்கிள்கள்!! 3 இளைஞர் உடல் கருகிப் பலி!!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலைப் பகுதியில் இன்றிரவு (29) ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியில் அதிவேகத்துடன் பயணித்துக்கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது பெற்றோல் சடுதியாக வெளியேறி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. அதில் சிக்குண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பலியாகியுள்ளனர்.

வந்தாறுமூலை – பலாச்சோலையைச் சேர்ந்தவர்களான மோகன் மயூரன் (வயது 22), முருகுப்பிள்ளை பவித்திரன் (வயது 23) மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த அதீப் (வயது 20) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இந்த அனர்த்தத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மேலும் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *