முடியுமானால் ஏப்.5இல் பலத்தைக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு ஐ.தே.க. சவால்
முடியுமானால் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பை தோற்கடித்துக் காட்டுமாறு மஹிந்த அணிக்கு சவால் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.
இது நல்லாட்சி அரசுக்கு ஏற்பட்ட படுதோல்வியாகும் என்றும், இவ்விரு அமைச்சர்களும் பதவி துறக்கவேண்டும் என்றும் மஹிந்த அணி வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபூர் ரஹ்மான்,
”குழுநிலை விவாதத்தின்போது பொதுவாக வாக்கெடுப்பு கோரப்படுவதில்லை. எனவே, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாலைநேரத்தில் சபையில் இருக்கவில்லை. இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி – ஒளிந்திருந்தே மஹிந்த தரப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
அப்படியே அவர்களுக்குப் பலம் – துணிவு இருப்பின் ஏப்ரல் 5ஆம் திகதி நடைபெறும் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பை தோற்கடித்துக் காட்டட்டும்” – என்றார்.