கொழும்பில் போட்டியிடுவது குறித்து தீவிரமாகச் சிந்திக்கின்றது தமிழரசு! – அதன் தலைவர் மாவை தகவல்
“இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்குக்கு வெளியில் – குறிப்பாகக் கொழும்பில் – தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன. சில முடிவுகளை உரிய வேளை வரும்போது எடுப்போம்.”
– இவ்வாறு கூறியிருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.
கொழும்பு – பம்பலப்பிட்டி சனசமூக நிலைய மத்திய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ரி.துரைராஜசிங்கமும் கலந்துகொண்டார்.
கொழும்புக் கிளையின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவானார். இவரே கட்சியின் சட்டத்துறைச் செயலாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்புக் கிளையின் செயலாளராக ஆர்னோல்ட் பிரிந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.