மேதினத்தில் யானை பலத்தை நிரூபிப்போம்! – ஐ.தே.க. செயலர் சூளுரை

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு பங்கேற்பார்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐ.தே.கவின் மேதினக் கூட்டம் இம்முறை கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இது குறித்து இன்று கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு இலட்சக் கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து வெகு விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.

அடுத்து நடத்தப்படவுள்ள தேசிய தேர்தலை வெற்றிக்கொள்ளும் வகையில் இம்முறை மே தினப் பேரணியும் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறிகொத்த கிராமத்திற்குக் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது.

மே தினத்துக்குப் பின்னர் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறிகொத்த கிராமத்துக்குக் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன் மே தினத்துக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஆரம்பிக்கவுள்ள மெகா கூட்டணியைப் பிரகடனப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்பும் கட்சிகளுடன் இணைந்து அடுத்த தேசிய தேர்தலை வெற்றிகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *