ஐ.நா. பொறிமுறை இல்லாதுபோனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வராது! – சாந்தி எம்.பி. தெரிவிப்பு
“ஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு இலங்கை வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு இல்லாது போய்விடும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்குக் கால நீடிப்பு வழங்குவது தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. அது ஒரு கால அவகாசம் இல்லை.
இலங்கையில் இறுதிப் போரில் ஏற்பட்ட அழிவுகள், போர் மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையை நிலைமாறுகால நீதியின் கீழ் கண்காணிப்பதற்கான ஒரு காலமாகத்தான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது குறித்து பிழையான வழியில் சில அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மக்களுக்குக் கருத்துக்களைப் பரப்பிக்கொண்டு இருப்பதுதான் வேதனையான விடயம்.
இது கால அவகாசம் அல்ல. இலங்கையைக் கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையாகத்தான் இது காணப்படுகின்றது.
உண்மையில், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை இருப்பதால்தான் மஹிந்த அணியினர் இதில் இருந்து வெளியில் வருவதற்குக் கடும் பிரயத்தனம் எடுக்கின்றார்கள்.
இந்தக் கண்காணிப்புக் காலத்தில் இருந்து இலங்கை வெளியில் வந்து விட்டால் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் என்பவற்றுக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும்” – என்றார்.