‘ஈழத்தமிழர்’ தொடர்பில் இந்தியா அதிக கரிசனை! – ’13’ திருத்தச் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்து
“இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கரிசனை கொண்டுள்ளோம். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்”
– இவ்வாறு தெரிவித்தது இந்தியா.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்கப் பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
குறித்த அறிக்கையைத் தொடர்ந்து உரையாற்றியபோதே இந்தியப் பிரதிநிதி இவ்வாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை எமது நட்புநாடு என்றவகையில் சகல விடயங்களிலும் இந்தியா துணை நிற்கும். குறிப்பாக தேசிய ஒற்றுமை, மனித உரிமை போன்ற விடயங்களில் அதிக கரிசனை கொண்டுள்ளோம்.
அத்தோடு, இலங்கையின் தமிழ்ச் சமூகம் தொடர்பாக அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
மீள்குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம்” – என்றார்.