‘ ஜனாதிபதி வேட்பாளரே…’ கோட்டாவை மகிழ்வித்த அமைச்சர் நவீன்!
” எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரே…” என விளித்து கோட்டாபய ராஜபக்சவை இன்று மகிழ்வித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க.
பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு கொழும்பு – நாராஹேன்பிட்டிய பகுதியிலுள்ள விகாரையில் இன்று ( 20) நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் நவீன்,
” எனது உரையை குறுகிய நேரத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது. எமது எதிர்கால ஜனாதிபதி வேட்பாளருக்கு ( கோட்டாபய) மேலும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும்.” என குறுப்பிடுகையில், அவையிலிருந்து அனைவரும் சிரித்துவிட்டனர்.
அத்துடன், நாட்டில் சிங்கள, பௌத்த மக்களின் வாக்குகளால்தான் ஆட்சிமாற்றம் ஏற்படுகின்றது. தகைமையுடையவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் ( கோட்டாவுக்கு.) அதற்காக நாம் பிரார்த்திப்போம்.” என்றும் நவீன் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ச,
” என்னை ஜனாதிபதி வேட்பாளராக விளித்த நண்பன் நவீன் திஸாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தந்தையால் ( காமினி திஸாநாயக்க) செய்யமுடியாமல்போனவற்றை, நவீன் செய்யவேண்டும் என நானும் பிரார்த்திக்கின்றேன். அதேபோல் நவீனின் மாமா ( கரு ஜயசூரிய) ஜனாதிபதி வேட்பாளராவார் என நாமும் எதிர்ப்பார்க்கின்றோம்.” என சிரித்தபடியே கூறினார்.