ஜெனிவாவில் 21இல் இலங்கைக்கு அக்கினிப் பரீட்சை! – ஆணையாளரைச் சந்திக்க அரச குழு பிரயத்தனம்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும், இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்துப் பேசவுள்ளனனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் நாளைமறுதினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

அதற்கு அடுத்த நாள், மார்ச் 21ஆம் திகதி , இலங்கை தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த இரண்டு நாள் அமர்வுகளிலும், பக்க அமர்வுகளிலும் பங்கேற்பதற்காக, இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளும் தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் ஜெனிவாவில் குவியத் தொடங்கியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை அரச தரப்புக்குழு இன்று காலை ஜெனிவா சென்றடைகின்றது.

இந்தக் குழுவினர் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளதுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

ஜெனிவாத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து அவர்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.

அதேவேளை, இலங்கை  அரசைத் தொடர்ந்தும் ஐ.நாவின் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பசெலெட் அம்மையாரைச் சந்திக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *