ரணிலே ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர்! – பொன்சேகா அதிரடி அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (17) தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
“ஐ.தே.கவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிக்கின்றார். தலைவர்தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும். அந்தவகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கும்போது,
“போர்க்காலத்தில் ஓரிரு படையினரே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். போருக்குப் பின்னரும் அவ்வாறு நடைபெற்றன. எனவே, இவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உள்நாட்டில் விசாரணை நடைபெறுவதால்தான் ஐ.நா. இன்று தலையிடுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைப் பகைத்துக்கொள்ள முடியாது.
11 மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராகப் போதுமானளவு சாட்சியங்கள் உள்ளன. இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” – என்றார்.