மன்னார் விபத்தில் கணவன் மரணம்; மனைவி படுகாயம்!
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, புதுக்குடியிருப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று (17) மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.
அவரது மனைவி படுகாயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் ஆண்டாங்குளம் ஆக்காட்டி வெளி கிராமத்தை வதிவிடமாகவும், மன்னார் சாந்திபுரம் கிராமத்தை தற்காலிக இடமாகவும் கொண்ட தனியார் பஸ்ஸின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது – 49) எனத் தெரியவருகின்றது.
குறித்த குடும்பஸ்தர் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, தலைமன்னாரில் இருந்து மன்னார் நோக்கிப் பொருட்களுடன் பயணித்த வாகனம் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.