காணி உறுதிப்பத்திரங்களில் 50 வீதமானவை போலி!
நாட்டிலுள்ள காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என திடுக்கிவிடும் தகவலை வெளியிட்டுள்ளார் பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே.
பிறப்பு, திருமண, இறப்புச் சான்றிதழ்களில் ஐந்திலொன்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
குழந்தைகளை பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்காகவும், வங்கிக்கடன்களை பெறுவது உள்ளிட்ட பல தேவைகளுக்காகவுமே இவ்வாறான போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எனவே, மோசடிகளை தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து காணி, பிறப்புச் சான்றிதழ்களை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வருடம் முதல் பிரஜைகளின் தகவல்களும் கணணிமயப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி பிறக்கும் குழந்தைகளுக்கு இலக்கமொன்று வழங்கப்படுவதுடன், அதனையே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பயன்படுத்துவதற்கும், தேசிய அடையாளஅட்டையை பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.