மைத்திரிபாலவேதான் ஜனாதிபதி வேட்பாளர்! – சு.க. உடும்புப்பிடி

”ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை இழந்துவிட்டு, கூட்டணி அமைப்பதற்கு நாம் தயாரில்லை. மைத்திரிபால சிறிசேனவே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவார்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர திட்டவட்டமாக அறிவித்தார்.

கண்டியில் இன்று (16) நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இரு தரப்புகளிலிருந்தும் கொள்கை விளக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி தெரிவுசெய்துவிட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனவே, சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை இழப்பதற்கு நாம் தயாரில்லை. சுதந்திரக் கட்சியின் ஆசிர்வாதமின்றி வெற்றி இலக்கை அடைய முடியாது.

எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாடு எட்டப்படும்வரை தனித்துவமாகவே இயங்குவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *