வகுப்பாசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்….!
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பாசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியர் காத்தான்குடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிபதி எம்.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
தரம் 5இல் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீதே குறித்த வகுப்பாசிரியர் நேற்று கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த ஆசிரியர் கையினாலும் தடியினாலும் மிகவும் கடுமையாகத் தம்மைத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கப்பட்டது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே இப்பாடசாலைக்குக் கடமைக்காக வந்தார் எனவும், இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் எனவும், இவருடைய நடவடிக்கை மோசமாகக் காணப்பட்டதால் இவரை இடமாற்றுமாறு பல தடவைகள் அதிகாரிகளைக் கேட்டதாகவும் குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.