பாதாளக்குழுத் தலைவர் மதுஷின் வடக்கு முகவராக யாழ்.வர்த்தகர்! – பொலிஸ் விசாரணையில் அம்பலம்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டு டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட மாக்கந்துர மதுஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செயற்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை சிங்கள ஊடகமான ‘லங்காதீப’ வெளியிட்டுள்ளது.

மாக்கந்துர மதுஷின் கைதையடுத்து அந்த ஊடகம் வெளியிட்டுவரும் விசாரணை தொடர்பான அறிக்கையிடலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாளக் குழுவின் தலைவரான மாக்கந்துர மதுஷ் கடந்த ஜனவரியில் டுபாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் வைத்து அவரும் அவரது சகாக்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தநிலையில் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுக்கும் தொடர் விசாரணைகளில் மாக்கந்துர மதுஷின் குழுவைச் சேர்ந்த பலர் தென்னிலங்கையில் கைதுசெய்யப்படுகின்றனர்.

கடந்த திங்கட்கிழமையும் அவரது சகா ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 180 கோடி ரூபா பெறுமதியான 171 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், மாக்கந்துர மதுஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே செயற்பட்டுள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நபர் பொலிஸ் உயர்மட்டத்தினருக்கும் நன்கு தெரிந்தவர் என்றும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *