பயிலுநர்களின் எதிர்பார்ப்புகள் சிறக்க உரிய வழிவகைகள் மேற்கொள்ளப்படும்! – நஸீர் தெரிவிப்பு
“நைற்றாவில் பயிற்சிகளைப் பெறும் பயிலுநர்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற விரும்புவோரின் எதிர்பார்ப்புகள் உரியமுறையில் தீர்வு செய்யப்பட வழிமுறைகள் மேற்கொள்ளப்படும்.”
– இவ்வாறு கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோது அதில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்திய தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ரிக்கல் துறைகளிலுள்ள பில்டிங் மற்றும் ஸ்ரக்ஸறல், ஹைவேஸ் மற்றும் றெயில்வே, வோட்டர், என்வோய மென்ரல் மற்றும் எலக்ரிக்கல் பவர் மற்றும் எலரோனிக் ரெலிகொம்மினிக்கேஷன் மற்றும் ஓட்டோமோபயில் மற்றும் ஜெனரல் மற்றும் மறினி போன்ற துறைகளுக்கான மாணவர்கள் 450 பேருக்கு இதன்போது அனுமதிப் படிவங்களை வழங்கி வைத்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போது:-
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்மீது நம்பிக்கை வைத்து தேசிய பயிலுநர்,கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவராக என்னை நியமித்துள்ளார். அவரது எண்ணம் சிறக்கும் வண்ணம் எனது பணிகளை நான் மேற்கொள்வேன். இந்நிலையில் இது போன்ற பயன்தரும் பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியமைக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டில் போதைப்பொருளை முற்றாக ஒழிக்கவேண்டும் எனத் திடசங்கற்பம் கொண்டு செயற்பட்டு வருகின்றார். அவரது துணிச்சல் மிக்க பணிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பதவியை நான் பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரதமரின் கவனத்துக்கு முக்கிய மூன்று விடயங்களை முன்வைத்திருக்கின்றேன். முதலாவது ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்ற திட்டம். இரண்டாவது நைற்றாவால் வழங்கப்படும் பயிற்சிகள் ஊடான சான்றிதழ்களைப் பெற்றவர்கள் அந்த சான்றிதழ்களைக் கொண்டு வெளிநாடுகளில் தொழில் மற்றும் மேலதிக கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டம். குறிப்பாக வெளிநாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் ஊடாக மேலதிக கல்வி வாய்ப்புகளை மற்றும் தொழில்களை பெறும் நிலைமைகளை உருவாக்குதல் முக்கியமானதாகும்.
மூன்றாவதாக இன்று ஆரம்பிக்கப்பட்ட கல்விநெறிகளுக்கு 1600 பேர் வரையில் விண்ணப்பித்துள்ளனர் எனினும், 400 பேருக்கே அனுமதிகளை வழங்க முடிந்துள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி கிடைக்கும் வகையில் எதிர்காலத்தில் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளேன்.
இவை குறித்து கூடிய விரைவாக பிரதமரின் வழிநடத்தலில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்” – என்றார்.