பெரும் பரபரப்புக்கு மத்தியில் பட்ஜட் மீது இன்று வாக்கெடுப்பு

கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆதரவு என்கிறது அரசு;
தோற்கடிக்கப்படும் என மஹிந்த அணி சூளுரை

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதில் ஆளும் தரப்பு பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டும் என அரச தரப்பினர் அறிவித்துள்ள நிலையில், வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிக்கப் போவதாக பொது எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த 5ஆம்திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 6ஆம் திகதியிலிருந்து இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு 6 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. .

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியையடுத்து எந்தத் தரப்புக்குப் பெரும்பான்மைப் பலம் உள்ளது என்ற சர்ச்சை ஏற்பட்டிருந்தது. ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த நிலையில் ஐ.தே.க மீண்டும் ஆட்சியமைத்தது தெரிந்ததே. இந்தநிலையில், அரசியல் குழப்ப நிலையின் பின்னர் நடைபெறும் முதலாவது வாக்கெடுப்பே இன்று நடைபெறவுள்ளது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். எனவே, கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வெற்றியீட்டுவோம்” என்று சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் பெரும்பான்மை வாக்குகளினால் சகல வாக்கெடுப்புகளிலும் வெற்றியீட்டுவது உறுதி எனவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாம் வாக்கெடுப்பில் தோற்றாலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்றும், பொது எதிரணியின் முயற்சி பயனிளிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து வாக்கெடுப்புகளிலும் எதிராக வாக்களித்து வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம் எனவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனவும் மஹிந்த அணியினரான பொது எதிரணியினர் சூளுரைத்துள்ளனர்.

இதேவேளை, ஜே.வி.பியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தப் பெரும் பரபரப்புக்கு மத்தியில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

இறுதி வாக்கெடுப்பு

நாளை 13ஆம் திகதி முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தான குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் ) நடைபெறவுள்ளது. இதற்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 5ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *