தேர்தலில் களமிறங்குகின்றாரா நடிகர் விஷால்?
நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். அரசியலிலும் ஆர்வம் காட்டும் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்தார். அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
சென்னையில் ஆரம்பித்த நகைக் கண்காட்சி ஒன்றை விஷால் நேற்று ஆரம்பித்து வைத்தார். அப்போது விஷாலிடம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “நாடாளுமன்றத் தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கவில்லை. அதே போல் இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கொண்டே இருக்கின்றோம். இன்னும் அறிவிக்கவில்லை.
முதலில் அறிவிக்கட்டும். அதன் பிறகு என் முடிவை சொல்கிறேன். கண்டிப்பாக இந்தத் தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்துத்தான்” என்று பதிலளித்தார்.
ரஜினி, கமல் இருவரும் இணைந்தால் நல்லது என்று கருத்து கூறி இருக்கிறீர்கள். கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு. “தேர்தல் திகதி முடிவான பின்னர் உத்தியோகபூர்வமாகப் பேசினால் நன்றாக இருக்கும். அப்போது பதில் அளிப்பேன்” – என்றார்.