5 வாய்ப்புகளை நழுவவிட்டோம்! தோல்வி குறித்து விராட் கோஹ்லி கருத்து!
‘உலகத்தின் தலை சிறந்த பந்து வீச்சு’ மற்றும் ‘இந்தப் பந்து வீச்சுக்கு எதிராக 300 எல்லாம் சாத்தியமில்லை’ என்ற இந்திய அணி ஆதரவாளர்களின் தற்பெருமைவாதங்களெல்லாம் உடைந்து போக ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் அச்சுறுத்தலுடன் மீட்டெழுச்சி பெற்றுள்ளது.
359 ஓட்டங்கள் இலக்கை இறுதி ஓவர் வரை கொண்டு போகாமல் 48ஆவது ஓவரிலேயே முடித்து விட்டார் ஆஷ்டன் டர்னர். தொடர் 2-2 என்று சமன் ஆனது.இந்திய பீல்டிங், மாற்று விக்கெட் கீப்பரின் இடம் எல்லாம் கேள்விக்குறியானது.
இந்நிலையில் விராட் கோஹ்லி தோல்வி பற்றி கூறியிருப்பதாவது:
” ஆடுகளம் ஆட்டம் முழுதும் நன்றாகவே செயல்பட்டது. 2 ஆட்டங்களிலும் பனிப்பொழிவின் தவறான பக்கத்தில் நாங்கள் அகப்பட்டோம். ஆனால் இதெல்லாம் தோல்விக்கு சாக்கு அல்ல.
கடைசி சில ஓவர்களில் 5 வாய்ப்புகளை கோட்டை விட்டோம் என்பது விழுங்குவதற்குக் கடினமான ஒன்றுதான், ஆஷ்டன் இன்னிங்ஸ் அபாரம், ஹேண்ட்ஸ் கம்ப் பிரில்லியண்ட் இன்னிங்ஸ், கவாஜா ஒருங்கிணைப்பு இன்னிங்ஸை ஆடினார்.
கடந்த போட்டியில் பனிப்பொழிவு இருக்கும் என்றனர். ஆனால் அது தவறானது. இங்கு அவர்கள் நன்றாக ஆடினர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். எந்தப் பகுதியில் அடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து அடித்தனர்.
முதலில் பேட் செய்யவே விரும்பினோம், அதில் எந்த வித குழப்பமும் இல்லை. 5வது பவுலர் வேண்டாம் என்று நினைத்தோம் விஜய் சங்கர், சாஹல் பனிப்பொழிவில் வீசினால் கடினம்தான் ஆகவேதான் பனிப்பொழிவுக்கு முன்பாக அவர்கள் ஓவர்களை முடித்து விட நினைத்தோம்.
ஆனால் கடைசியில் மிகவும் ஈரமாக இருந்தது. முதல் பகுதி பந்து வீச்சு பரவாயில்லை. கடைசியில் அவர்கள் அடிக்கத் தொடங்கியவுடன் கடினமானது.
ஸ்டம்பிங் வாய்ப்பு மிக முக்கியமானது, பீல்டிங்கில் சொதப்பினோம். டி.ஆர்.எஸ் ஆச்சரியமாக இருந்தது, சீராகவே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் அது ஒரு பேசுபொருளாக மாறி வருகிறது.
கடைசி போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும், மிகச்சிறப்பாக ஆட வேண்டும். இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரகா 2 முறை கண்கள் திறக்கப்பட்டுவிட்டன, இந்தத் தோல்வி நிச்சயம் காயப்படுத்தும், சரியான வழியில் காயப்படுத்தும். ” என்றார் விராட் கோஹ்லி.