வடகொரியாவில் தேர்தல் எப்படி நடக்கும்? மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் தெரியுமா?

துளியும் அதிகாரமற்ற தங்களது நாட்டின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வடகொரிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிம் ஜாங்-உன் அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, இதுபோன்ற தேர்தல்கள் நடப்பது இது இரண்டாவது முறை.

சுப்ரீம் பீப்பிள்ஸ் அசம்ப்லி (எஸ்பிஏ) என அழைக்கப்படும் வடகொரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும்.

இதில் ஆச்சர்யத்துக்குரிய விடயம் என்னவென்றால், தேர்தலில் ஒரேயொரு வேட்பாளர் மட்டுந்தான் போட்டியிடுவார், அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலில் 100 சதவீதத்தை ஒட்டிய அளவிலேயே வாக்குப்பதிவு சதவீதம் இருக்கும்.

உலகின் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வடகொரியாவை, கிம் வம்சத்தினர் பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். கிம் குடும்பத்தினருக்கும், நாட்டின் தலைவருக்கும் விஸ்வசமாக மக்கள் இருக்க வேண்டும்.

தேர்தல் எப்படி நடக்கும்?

தேர்தல் தினத்தன்று, வட கொரியாவை சேர்ந்த 17 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

“விசுவாசத்தின் குறியீடாக மக்கள் அதிகாலையிலேயே வாக்களிக்க வர வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதால், ஒவ்வொரு தேர்தலிம்போது வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதும்” என்கிறார் தென்கொரியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளரான பியோடோர்.

உங்களுக்கான முறை வரும்போது, ஒரேயொரு வேட்பாளரின் பெயர் குறிக்கப்பட்ட வாக்குச்சீட்டு கொடுக்கப்படும். அதை நீங்கள் வாங்கியவுடன், நிரப்ப வேண்டியதோ, குறிக்க வேண்டியதோ ஒன்றுமில்லை; அதை நேரடியாக பொதுவெளியில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டு பெட்டிக்குள் போடுவதுதான் ஒரே வேலை.

தனியாக வாக்களிப்பதற்கான வாக்குப்பதிவு மையமும் வடகொரியாவில் இருக்கிறது. ஆனால், அந்த வழியை தேர்ந்தெடுப்பவர்கள் மீது உடனடியாக சந்தேகம் எழும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் சட்டப்படி, மக்கள் தங்களது தொகுதியில் நிற்கும் அந்த ஒரேயொரு வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் அழிப்பதற்கு உரிமையுண்டு என்றாலும், அப்படி செய்பவர்களை பைத்தியக்காரர்களாக காவல்துறையினர் அறிவிப்பர் என்று பியோடோர் கூறுகிறார்.

உங்களது வாக்கை பதிவு செய்ததும், வாக்குச்சாவடியின் வெளியே நாட்டின் சீரிய தலைமைக்கு தாங்கள் வாக்களித்ததை எண்ணி கொண்டாடும் கூட்டத்தினருடன் நீங்களும் இணைவதற்கு எதிர்பார்க்கப்படுவீர்கள்.

“ஒவ்வொரு வாக்குச்சாவடியில் முன்பும், மக்கள் வாக்களிப்பதை திருவிழா கொண்டாடுவது போன்று இருப்பதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிடும்” என்று கூறுகிறார் வடகொரியா பற்றிய செய்தி இணையதளத்தின் ஆய்வாளரான மின்யங் லீ.

வடகொரியாவை பொறுத்தவரை தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளை கொண்டு அப்பகுதியில் இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, சீனாவுக்கு தப்பியோடிய தேசத்துரோகிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தின் அதிகாரம் என்ன?

வடகொரியாவின் நாடாளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.

வடகொரியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிகளை கொண்ட ஒரே சட்டமியற்றும் அவையான இதன் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.

“சில சர்வதேச ஊடகங்கள் எஸ்.பி.ஏவுக்கு குறைந்தளவில் அதிகாரம் இருப்பதுபோல் செய்தி வெளியிடுவதுண்டு. அது முற்றிலும் தவறானது, வட கொரிய நாடாளுமன்றத்துக்கு துளிகூட அதிகாரமில்லை” என்று கூறுகிறார் தென்கொரியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளரான பியோடோர்.

நாட்டின் தலைவரால் வரைவு செய்யப்படும் சட்டங்களுக்கு நாடாளுமன்றம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெறுமனே சட்டத்தை நிறைவேற்றிவிடும்.

வடகொரிய நாடாளுமன்றத்துக்கு சட்டப்படி இருக்கும் அதிகாரம், நடைமுறைக்கு வர முடியாத நிலையிலேயே உள்ளது.

அதாவது, வடகொரியாவின் அரசமைப்பு சட்டத்திற்கு மாற்றுவதற்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவு ஏற்படும்பட்சத்தில் கிம் ஜாங்-உன்னை அதிகாரத்திலிருந்து கீழிறக்க முடியும்.

வடகொரிய நாடாளுமன்றம் கூடுவதற்கென குறிப்பிட்ட காலவரையறை ஒன்றும் கிடையாது. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக நடைபெறும் கூட்டத்தின்போது, துணை குழு ஒன்று உருவாக்கப்பட்டு நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும்.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளை போன்று தேர்தல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை பதற்றத்துடன் எல்லாம் இருக்காது. வடகொரிய தேர்தல் களம். என்னதான் மக்கள் அனைவரும் ஒரேயொரு வேட்பாளருக்கு வாக்களித்தாலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில நாட்கள் ஆகிறது.

ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் போதும், வெற்றி வேட்பாளர் குறித்த தரவுகள் மக்களை ஆச்சர்யப்படுகிறதோ இல்லையோ, வாக்குப்பதிவு சதவீதம் வியப்பளிக்கும். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 99.97 சதவீத வாக்குகள் பதிவானது.

0.03 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்ததற்கு வாக்காளர்களின் உடல்நிலையை காரணம் என்று அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக கிம ஜாங்-உன் தொகுதிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். பொதுவாக கிம்மின் தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு சதவீதம், ஆதரவு ஆகிய இரண்டுமே 100 சதவீதம் இருக்கும். அதன் பிறகு, மற்ற தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *