எழுவர் விடுதலைக்காக சென்னையில் மனித சங்கிலிப் போராட்டம்!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இதற்கிடையே, 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மனித சங்கிலி போராட்டம்
தொடங்கியது. இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார்.
திராவிடர் கழகம், திருமாவளவன், இடதுசாரிகள், திராவிடர் விடுதலைக்கழகம், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை இதில் பங்கேற்றன.
பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க.வின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல், புதுச்சேரி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.