கோர விபத்தில் பஸ் நடத்துநர் பலி! 40 பேர் வரை வைத்தியசாலையில்!!
அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனையில் இருந்து அளுத்கமவுக்கு கல்விச் சுற்றுலா வந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கடுகண்ணாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பஸ் நடத்துநரான அக்கரைப்பற்று, சவுத் வீதியைச் சேர்ந்த இன்ஹாம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி, மாவனல்லை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.