புதிய இளம் தம்பதிகளுக்கு ஒரு கோடி ரூபா இலகு கடன்!
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நடுத்தர வருமானம் பெறும் முதல் தடவையாக வீட்டினைக் கொள்வனவு செய்யும் புதிய இளம் தம்பதிகளுக்கு வீடொன்றினைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது தங்களது முதல் வீட்டினை நிர்மாணித்துக் கொள்வதற்கு 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி ரூபா) இலகு கடன் திட்டங்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த ´ஹோம் ஸ்வீட் ஹோம்´ கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
10 மில்லியன் ரூபா வரையில் 6 சதவீத வட்டியில் 25 வருட காலத்தில் திருப்பிச் செலுத்தல் என்ற வகையில் கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இக்கடன் திட்டமானது தனியார் துறையினால் நிர்மாணிக்கப்படும் வீடுகள் அல்லது நடுத்தரத்திலான மாடி வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கும் பெற்றுக்கொடுக்கப்படும்.
அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வீடொன்றினைக் கட்டிக் கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
ஆகவே, அவர்கள் வீடொன்றினைக் கட்டிக் கொள்ளும் கனவினை நிறைவேற்றக் கூடிய வகையில் ´என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்கா´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ´சிகின மாளிகா´ சலுகைக் கடன் திட்டம் அறிமகப்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தற்போது வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இக்கடன் திட்டத்தின் கீழ் ரூபா 10 மில்லியன் வரை 15 வருட காலத்தில் திருப்பிச் செலுத்தல் என்ற வகையில் பெற்றுக் கொள்ளலாம்.
இக்கடனுக்கான வட்டிச் செலவீனத்தில் 75 சதவீதத்தினை அரசு பொறுப்பேற்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.