மாகாணசபைத் தேர்தலில் ‘வெட்டு’ தலைவரை தரிசிக்க படையெடுப்பு!

மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அதை வெற்றிகொள்வதற்கு உஷார் நிலையில் இருக்குமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி பணிப்புரை விடுத்துள்ளது.

பழைய முறையிலேயே ( விகிதாசார) தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான சட்டஏற்பாடுகள் விரைவில் பூர்த்திசெய்யப்படவுள்ளன.

இதனால், பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் களம் நோக்கி தமது பார்வையை செலுத்தியுள்ளன.

குறிப்பாக ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், மாவட்ட ரீதியில் கூட்டங்களை நடத்தி தொகுதிகளை பலப்படுத்திவருகிறார்.

முக்கிய சில தொகுதி அமைப்பாளர்களுடன், குருணாகலையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, தேர்தலுக்கு தயாராகுமாறு அவர் பணிப்பு விடுத்துள்ளார்.

இதன்படி புதிய தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஆயுட்காலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளில் உறுப்பினர்களாக இருந்த சிலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது எனவும் கதை அடிபடுகின்றது.

இதனால், தினந்தோறும் சிறிகொத்தவை நோக்கி உறுப்பினர்கள் படையெடுக்கின்றனர். கட்சி தலைவரையும் கடவுளாக மதித்து செயற்படுகின்றனர். பொதுவெளியில் தலைவரை போற்றி புகழும் வகையில் உரையாற்றிவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *